சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் |
ஏழாம் திருமுறை |
7.99 திருநாகேச்சரம் பண் - பஞ்சமம் |
பிறையணி வாணு தலாள்உமை யாளவள் பேழ்கணிக்க
நிறையணி நெஞ்சனுங் கநீல மால்விடம் உண்டதென்னே
குறையணி குல்லைமுல் லைஅளைந் துகுளிர் மாதவிமேற்
சிறையணி வண்டுகள் சேர்திரு நாகேச் சரத்தானே.
|
1 |
அருந்தவ மாமுனி வர்க்கரு ளாகியோர் ஆலதன்கீழ்
இருந்தற மேபுரி தற்கியல் பாகிய தென்னைகொலாங்
குருந்தய லேகுர வம்மர வின்னெயி றேற்றரும்பச்
செருந்திசெம் பொன்மல ருந்திரு நாகேச் சரத்தானே.
|
2 |
பாலன தாருயிர் மேற்பரி யாது பகைத்தெழுந்த
காலனை வீடுவித் துக்கருத் தாக்கிய தென்னைகொலாங்
கோல மலர்க்குவ ளைக்கழு நீர்வயல் சூழ்கிடங்கிற
சேலொடு வாளைகள் பாய்திரு நாகேச் சரத்தானே.
|
3 |
குன்ற மலைக்கும ரிகொடி யேரிடை யாள்வெருவ
வென்றி மதகரி யின்னுரி போர்த்தது மென்னைகொலாம்
முன்றில் இளங்கமு கின்முது பாளை மதுவளைந்து
தென்றல் புகுந்துல வுந்திரு நாகேச் சரத்தானே.
|
4 |
அரைவிரி கோவணத் தோடர வார்த்தொரு நான்மறைநூல்
உரைபெரு கவ்வுரைத் தன்று உகந்தருள் செய்ததென்னே
வரைதரு மாமணி யும்வரைச் சந்தகி லோடுமுந்தித்
திரைபொரு தண்பழ னத்திரு நாகேச் சரத்தானே.
|
5 |
தங்கிய மாதவத் தின்றழல் வேள்வியி னின்றெழுந்த
சிங்கமும் நீள்புலி யுஞ்செழு மால்கரி யோடலறப்
பொங்கிய போர்புரிந் துபிளந் தீருரி போர்த்ததென்னே
செங்கயல் பாய்கழ னித்திரு நாகேச் சரத்தானே.
|
6 |
நின்றவிம் மாதவத் தையொழிப் பான்சென் றணைந்துமிகப்
பொங்கிய பூங்கணை வேள்பொடி யாக விழித்தலென்னே
பங்கய மாமலர் மேன்மது வுண்டுவண் தேன்முரலச்
செங்கயல் பாய்வயல் சூழ்திரு நாகேச் சரத்தானே.
|
7 |
வரியர நாண தாகமா மேரு வில்லதாக
அரியன முப்புரங் கள்ளவை யாரழ லூட்டலென்னே
விரிதரு மல்லிகை யும்மலர்ச் சண்பக மும்மளைந்து
திரிதரு வண்டுபண் செய்திரு நாகேச் சரத்தானே.
|
8 |
அங்கியல் யோகுதன் னையழிப் பான்சென் றணைந்துமிகப்
பொங்கிய பூங்கணை வேள்பொடி யாக விரித்தலென்னே
பங்கய மாமலர் மேல்மது வுண்டுபண் வண்டறையச்
செங்கயல் நின்றுக ளுந்திரு நாகேச் சரத்தானே.
|
9 |
குண்டரைக் கூறையின் றித்திரி யுஞ்சமண் சாக்கியப்பேய்
மிண்டரைக் கண்டதன் மைவிர வாகிய தென்னைகொலோ
தொண்டிரைத் துவணங் கித்தொழில் பூண்டடி யார்பரவுந்
தெண்டிரைத் தண்வயல் சூழ்திரு நாகேச் சரத்தானே.
|
10 |
கொங்கணை வண்டரற் றக்குயி லும்மயி லும்பயிலுந்
தெங்கணை பூம்பொழில் சூழ்திரு நாகேச் சரத்தானை
வங்கம் மலிகடல் சூழ்வயல் நாவலா ரூரன்சொன்ன
பங்கமில் பாடல்வல் லாரவர் தம்வினை பற்றறுமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |